ஹட்டன் – டிக்கோயா தரவளை மேற்பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் பல மாதங்களாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது மக்கள் போக்குவரத்திற்காக மரம் மற்றும் மூங்கிலால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தால், இந்த தற்காலிக பாலமும் நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும், தொழிலுக்குச் செல்லும் பெரியவர்களும் தினமும் ஆபத்தான சூழ்நிலையில் இந்தப் பாதையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களது பிரச்சினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
