பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த 3,755 கஞ்சா கலந்த போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கட்கிழமை (08) பிற்பகல் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபர் இப்போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பழைய பஜார் வீதியில் அமைந்துள்ள கடையொன்றில், ஆயுர்வேத திணைக்களத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி, பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த மாத்திரைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அனுமதிப்பத்திரமற்ற ஆயுர்வேத மருந்துக் கடை ஒன்றை நடத்துவதாகக் கூறி, அதன் மறைவில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் அடிக்கடி அந்தக் கடைக்கு வந்து இம்மாத்திரைகளை வாங்கிச் செல்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
