தொழிலாளர் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமைப் பணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த உறுதிப்பாட்டை ILO தலைமைப் பணிப்பாளர் கில்பர்ட் எஃப். ஹூங்போ (Gilbert F. Houngbo) உயர்வாக மதிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் எனவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.
ILOவின் 114ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு சென்றிருந்த தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தலைமைப் பணிப்பாளருடன் இடம்பெற்ற நட்புறவான கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்பில், இலங்கையின் தொழிலாளர் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு திட்டங்களும் சீர்திருத்தங்களும் குறித்து அமைச்சர், ILO தலைமைப் பணிப்பாளருக்கு விளக்கமளித்தார்.
மேலும், பணியிடங்களில் ஏற்படும் வன்முறை மற்றும் தொந்தரவுகளுக்கு எதிரான ILOவின் ‘C190’ உடன்படிக்கையை இலங்கை சமீபத்தில் அங்கீகரித்துள்ளமை பற்றியும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
