பொது வீதிகளில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இத்தகைய வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்படும் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வகை வாகனங்களை இயக்கும் சாரதிகள் எதிர்காலத்தில் போதைப்பொருள் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட வாகனங்கள் குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து அறிக்கை பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பதிலாக சாகசச் செயற்பாடுகள் உள்ளிட்ட நோக்கங்களுக்காக மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படுவதாகவும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்படுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இது அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாற்றியமைக்கப்பட்ட வெளியேற்ற அமைப்புகள் கொண்ட வாகனங்களால் ஏற்படும் வீதி பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் தொந்தரவுகள் தொடர்பில் அதிகரித்து வரும் கவலைகள் மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரித்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனாதீர, இது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் (IGP) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
