கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் செயலிழந்துள்ளமையினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகக் கற்களை உடைத்து அகற்றும் ‘இன்டகோர்போரியல் நியூமெடிக் லித்தோட்ரிப்ஸி’ எனப்படும் இரண்டு விசேட இயந்திரங்கள் வைத்தியசாலையில் தற்பொழுது பயன்பாட்டில் இல்லாததே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான சிறுநீரகக் கற்களை உடலுக்குப் பாரிய பாதிப்புகள் இன்றி, மிகச்சிறிய துளையிடுதல் மூலம் அகற்றும் ‘பி.சி.என்.எல்’ (PCNL – Percutaneous Nephrolithotomy) சத்திரசிகிச்சைகளுக்கு இந்த இயந்திரங்கள் மிகவும் அவசியமானவையாக காணப்படுகின்றன.
இந்த உபகரணங்களைப் பெற்றுத்தருமாறு வைத்தியசாலை விசேட நிபுணர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும், இதுவரை அவை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் வைத்தியசாலை வட்டாரங்கள், இதனால் சத்திரசிகிச்சைக்காக திகதி குறிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நோயாளர்கள், பின்னர் இயந்திரங்கள் இல்லை என்ற காரணத்தால் மீண்டும் திருப்பி அனுப்பப்படும் அவலநிலை தொடர்வதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து மாத்தறை உள்ளிட்ட நாட்டின் ஏனைய தேசிய வைத்தியசாலைகளுக்கு இத்தகைய சிக்கலான சத்திரசிகிச்சைகளுக்காக நோயாளர்கள் இடம் மாற்றப்படுவதாகவும் தற்பொழுது தேசிய வைத்தியசாலையில் நான்கு விசேட அறுவைசிகிச்சை நிபுணர்கள் இத்துறையில் வாராந்தம் கடமைகளில் ஈடுபட்டுள்ள போதிலும், உபகரண பற்றாக்குறை அவர்களின் சேவையைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், கொள்வனவு நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
