மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரலையிம பகுதியிலுள்ள ஒரு கிராமிய வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று சந்தேகநபர்கள் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் வங்கி வளாகத்துக்குள் நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கட்டுப்படுத்தி, பின்னர் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள கழிவறை ஜன்னல் வழியாக உள்ளே பிரவேசித்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
