இலங்கை விமானப்படைக்கு அமெரிக்க அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) ரக பல்நோக்கு ஹெலிகொப்டர்கள் 10, ஜனாதிபதி Anura Kumara Dissanayake தலைமையில் நேற்று (23) ரத்மலானை விமானப்படை தளத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
ரத்மலானை விமானப்படை தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, விமானப்படையின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர் ஹெலிகொப்டர்களை பார்வையிட்ட அவர், விமானப்படை பணியாளர்களுடன் நினைவு புகைப்படத்திலும் இணைந்தார்.
இதன்போது இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திடப்பட்டது. அதில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் Kevin Schneider ஆகியோர் கையெழுத்திட்டனர்.
TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்களின் பல்நோக்கு திறன்களை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளுக்காக அவற்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஹெலிகொப்டர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் விமானி பயிற்சி திறன் மேம்படுவதுடன், வான்வழி நடவடிக்கைகளும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இயற்கை அனர்த்த நிவாரண பணிகள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அவசர பொதுச் சேவைகள் போன்ற துறைகளிலும் இவை முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளன.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் பாதுகாப்பு பணிகளுக்கான விமானப்படை பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கும் இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளதால், உலக சமாதான முயற்சிகளில் இலங்கையின் பங்களிப்பு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து விசேட சரக்கு போக்குவரத்து வசதிகள் மூலம் கடந்த ஜூன் 1ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஹெலிகொப்டர்கள், ரத்மலானை விமானப்படை தளத்தின் விமானப் பொறியியல் பிரிவில் ஒன்றிணைக்கப்பட்டன. பின்னர், இலங்கையின் வான்வெளி மற்றும் காலநிலைச் சூழலுக்கு ஏற்ப தேவையான அனைத்து தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்ததும், அவை உத்தியோகபூர்வ சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மார்ஷல் ஒப் தி எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த உள்ளிட்டோர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், அமெரிக்க தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் Paul Kapur, பதில் தூதுவர் Jayne Howell மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் Matthew House உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
