அகரவத்தையிலிருந்து லொனக் வரையிலான சுமார் 4 கிலோமீட்டர் நீளமுடைய பிரதான வீதி தற்போது மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த வீதியை நம்பி வாழும் சுமார் 750 குடும்பங்கள் தினசரி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் அமைந்துள்ள மமா/ஹட்/லொனக் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் 15 ஆசிரியர்கள் போக்குவரத்து சவால்களுக்கு மத்தியில் தங்களது கல்விச் சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியின் துயரமான நிலை காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேபோல் பொதுமக்கள் தினசரி தேவைகளுக்காக கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவசர மருத்துவ சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளும் இடையூறுகளை சந்திக்கின்றன. இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சேவையும் இப்பாதையில் இயங்காத நிலை காணப்படுகிறது.
மேலும், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான A7 வீதியில் மண்சரிவு, பாதை சேதம், மரங்கள் விழுதல் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால் மாற்றுப் பாதையாக பயன்படுத்தப்படும் முக்கியமான பாதையாகவும் இது திகழ்கிறது. இருப்பினும் தற்போது இவ்வீதியும் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அவசர காலங்களில் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
இந்த வீதி உள்ளூர் மக்களுக்கு மட்டுமன்றி, அவசர சூழ்நிலைகளில் பிராந்திய போக்குவரத்துக்கும் முக்கியமானதாக இருப்பதால், இதன் புனரமைப்பு அவசியமானதாக மாறியுள்ளது.
இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, அகரவத்தை – லொனக் பிரதான வீதியை விரைவாக புனரமைத்து மக்களின் போக்குவரத்து, கல்வி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.
