காத்தான்குடியில் அண்மைக்காலமாக அடிக்கடி பதிவாகி வரும் தீ விபத்துச் சம்பவங்கள் வணிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (25) மதியம் மேலும் ஒரு தீ விபத்து பதிவாகியுள்ளது.
காத்தான்குடி தீன் ரோட் பகுதியில் அமைந்துள்ள ஒரு வெல்டிங் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ, சில நிமிடங்களிலேயே கடை முழுவதும் பரவி, நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ வேகமாக பரவியதன் காரணமாக அருகில் இயங்கி வந்த மருந்தகத்திற்கும் தீ பரவி, அந்தக் கடையும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தீ விபத்துகள் காரணமாக வணிகர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். தீ பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வணிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
