டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் செயல்முறையானது ஒரு வெற்றிகரமான நிரந்தர நடவடிக்கை அல்ல எனவும், இதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன,
டெங்கு பரவலுக்கு மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளினால் புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், டெங்குவை ஒழிப்பதற்கான ஒரே தீர்வு அதுவல்ல. நுளம்பு ஒன்றின் வாழ்க்கை வட்டத்தில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த நுளம்பு என்று 4 நிலைகள் காணப்படுகின்ற போதிலும், இந்த புகைத்தல் செயல்முறை மூலம் முதிர்ந்த நுளம்புகள் மட்டுமே அழிக்கப்படுகிறது.
மேலும், ஒரு சுற்று புகையூட்டல் செய்வதற்கு மாத்திரம் அரசாங்கத்திற்கு 2,000 ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது. குறித்த புகையானது வான் பரப்பில் ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மாத்திரமே தங்கியிருக்கும் என்பதால், அந்த குறுகிய நேரத்திற்குள் புகைக்குள் சிக்கும் நுளம்புகள் மாத்திரமே அழிவடையும்.
அத்துடன், இச்செய்முறையால் டெங்கு நுளம்புகள் மாத்திரமின்றி, சூழலுக்கு நன்மை விளைவிக்கும் ஏனைய பயனுள்ள பூச்சியினங்களும் அழிவடைவதால் ஒட்டுமொத்த சுற்றுச் சூழல் சமநிலையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, புகை விசிறல் செயல்முறையானது டெங்கு பரவலுக்கான நிரந்தரமான தீர்வு அல்ல என்பதை உணர்ந்து, மிகவும் அத்தியவசியமான காரணங்களுக்காக, அறிவியல் பூர்வமான வழிகாட்டுதல்களின்படி மட்டுமே புகையூட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே, நுளம்புகள் பறக்கும் நிலையை அடைந்த பிறகு புகையூட்டல் மூலம் சிறியதொரு தற்காலிக நிம்மதியைப் பெறுவதை விட, நுளம்பு முட்டைகள் மற்றும் நுளம்பு குடம்பிகளை ஆரம்பத்திலேயே அழிப்பதே நிரந்தர தீர்வாகும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளையும், சூழலையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, நீர் தேங்கும் இடங்களை முழுமையாக அகற்றுவதன் மூலம் மட்டுமே நுளம்பு உற்பத்தியைக் தடுத்து டெங்குவை ஒழிக்க முடியும் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
