கடுவலை பகுதியில், குடிநீர் விநியோகம் என பதிவு செய்யப்பட்ட ,உற்பத்தி நிலையமொன்றில், இரகசியமாக மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது 18,500க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், குறித்த நிலையத்தில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை (27) கடுவலையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளிப்பார்வைக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களைத் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனம் போலக் காட்சியளித்த அந்த வளாகத்துக்குள், சட்டவிரோதமான முறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, தலா 180 மில்லி லீற்றர் அளவுடைய 18,575 உள்நாட்டு மதுபான போத்தல்கள் (மொத்தம் 3,345.5 லீற்றர்), வெளிநாட்டு மதுபான லேபிள்கள் ஒட்டப்பட்ட 1 லீற்றர் அளவுடைய 4 போத்தல்கள், 750 மில்லி லீற்றர் அளவுடைய ஒரு போத்தல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் எதனோல் அடங்கிய ஒரு போத்தல் மற்றும் பல்வேறு அதிநவீன மதுபான உற்பத்தி உபகரணங்கள், மதுபானம் தவிர, அங்கிருந்து 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சா என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேக நபர்களும் 30, 43, 58, 59 மற்றும் 62 ஆகிய வயதுகளை உடையவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, தெற்கு வேவெட, கெட்டலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளில் மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
