பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள லாகூர் நகரின் காஹ்னா பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்வி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஒரு ஆசிரியர் மற்றும் 8 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்த மாணவர்கள் 4 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானம் காரணமாக, முழுமையாக நிறைவுபெறாத இரண்டாவது மாடியின் கூரை இடிந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பயிற்சி மைய உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழப்புக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, காயமடைந்தோருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை வெளிப்படையான விசாரணை மூலம் கண்டறிவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
