ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையையும் அபராதத்தையும் இரத்து செய்து, விடுதலை வழங்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன நான்கு மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது, கட்டாய கொள்முதல் நடைமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை குத்தகைக்கு எடுத்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது.
விசாரணை முடிவில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, ஒவ்வொரு வழக்கிற்கும் நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது அந்த தீர்ப்பையும் அபராதத்தையும் ரத்து செய்ய கோரியே மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
