மாலபே நகரில் பொசன் பெளணர்மி தினத்தன்று அமைக்கப்பட்டிருந்த தானசாலை ஒன்றில் வரிசையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை, ஒரு குழுவினர் பாதுகாப்புத் தலைக்கவசம் மற்றும் கைகளாலும் கால்களாலும் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (30) செவ்வாய்க்கிழமை மாலபே பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதற்கமைய, இத்தாக்குதலுடன் தொடர்புடைய பட்டிவத்த வீதி, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சந்தேகநபர்களை மாலபே பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளைஞர் மாலபே நகரில் உள்ள தானசாலையில் சோறு வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தபோது, வரிசைக்கு வெளியில் இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.
இதன்போது, அவர்களை வரிசையின் பின்னால் சென்று நிற்குமாறு அந்த இளைஞர் கூறியதே இக்கொடூரத் தாக்குதலுக்குக் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் இன்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
