இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முன்னர் தங்களை பதிவு செய்யது கொள்ள வேண்டும் என்று தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே.சதுர மிகிதும்ப தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையங்கள் குறித்து விசேட கணக்கெடுப்பு ஒன்று அண்மையில் நடத்தப்பட்டது. அதன் மூலம் நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் முதியோர் பராமரிப்பு நிலையங்களை இனங்கண்டு அவற்றின் அடிப்படைத் தகவல்களை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை காலமும் தகவல்களை வழங்காமல் முதியோர் இல்லங்களை நடத்தி வருபவர்கள் எமது செயலகத்தால் வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து விபரங்களை உடனடியாக வழங்க முடியும். இதனால் எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள விசேட நலத்திட்டங்களில் இணைத்துக் கொள்ளவதற்கு இப்பதிவுகள் மிகவும் அவசியமானதாகும்.
மேலும் 5 முதியவர்களை தங்க வைத்து அவர்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் எந்தவொரு நிலையமும் பதிவு செய்யப்படாமல் இருப்பின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யபடாமல் இயங்கி வரும் 311 முதியோர் இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தனித்தனியாக எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 30 திகதி முன்னர் தங்களது இல்லங்களை பதிவு செய்யத் தவறும் பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
