6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல் பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தக் கலந்துரையாடலுக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு ) மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர்.
இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும், ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இந்த வருடாந்த இருதரப்பு கலந்துரையாடல், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்வதற்கும், ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்தது. கலந்துரையாடல்களின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவங்களுக்கு இடையிலான ஈடுபாடு, பயிற்சி மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பு பிரதிநிதிகளும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
