இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறித்த செய்திகளுக்கு மத்தியில், இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா நிறுவப்பட்டதன் 250ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வொஷிங்டன் மற்றும் ஜெருசலேம் நகரங்களுக்கு இடையிலான நெருக்கமான உறவையும் பாராட்டியுள்ளார்.
இதன்போது, உலகின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அமெரிக்காவே என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான பிணைப்பை இஸ்ரேல் பெரிதும் மதிப்பதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இவர்களது சந்திப்பு இடம்பெறவுள்ள திகதி அல்லது இடம் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஈரான் மற்றும் பிராந்திய பதற்ற தணிப்பு முயற்சிகள் தொடர்பாக, கடந்த சில வாரங்களாக ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக வெளியான அறிக்கைகளுக்கு மத்தியில் இந்தத் தொலைபேசி அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக, லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
