த.கலைச்செல்வன்
முல்லைத்தீவு
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பொதுச்சந்தையில் இன்றைய தினம் (05.07.2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேசத்திற்குட்பட்ட பொதுச்சந்தையில் இன்றைய(05) தினம் அதிகாலை வேளையில் கடைகளின் பூட்டுக்களை உடைத்து, உள்ளே புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெடுங்கேணி பொதுச்சந்தையில் வழமை போல நேற்று வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு வியாபாரிகள் தத்தமது கடைகளைப் பூட்டிச் சென்றிருந்தனர். இன்றைய(05) தினம் காலை வியாபாரப் பணிகளுக்காக அவர்கள் சந்தைக்கு வருகை தந்தபோதே, பல கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுக் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
சந்தையினுள் உள்ள பலசரக்குக் கடைகள், மரக்கறி மற்றும் பழக்கடைகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் மற்றும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த சில்லறைப் பணமும் திருடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு அல்லது அதிகாலை வேளையில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு விபரம் இதுவரை முழுமையாகக் கணக்கிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தடயவியல் ஆதாரங்களைப் சேகரித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் சந்தைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
