போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்கிய விவகாரம் தொடர்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் (CFIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போலி கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளை அடுத்து, இன்று (06) திங்கட்கிழமை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் (பாதாள உலக) குழுவொன்றின் உறுப்பினரின் புகைப்படம் இந்த கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அதற்கான கைவிரல் அடையாளங்கள் (Biometric Data) வேறொரு நபருடையது என விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குடிவரவு திணைக்கள அதிகாரி, உரிய சரிபார்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், சட்டவிரோதமான முறையில் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, போலி கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனப் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
