கிரிபாவ மற்றும் பன்னல ஆகிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உட்பட மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கிரிபாவ , பெரகும்புர வீதியில் தம்புத்தேகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், எதிர்த்திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களினதும் ஓட்டுநர்கள் இருவரும், ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண் ஒருவரும் மற்றும் 7 வயதுக் குழந்தையும் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பெரகும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே ஒரு ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ஓட்டுநரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்கள் பம்பரே மற்றும் பெரகும்புர பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 63 வயதுடையவர்களாவர்.
இதேவேளை, பன்னல – குளியாப்பிட்டிய வீதியின் பன்னல நகருக்கு அருகில் மற்றுமொரு விபத்து பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டியவிலிருந்து பன்னல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மீது, எதிரே அதிவேகமாக வந்த லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோனவில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுநர் பன்னல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இ்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
