நாடளாவிய ரீதியில் 66,064 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 34,828 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மீள அதிகரிப்பைக் காண முடிகிறது. நோயாளர்களின் அதிகரிப்போடு வைத்தியசாலைகளின் வார்டுகளிலும் பாரியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது.
சிறுவர் வைத்தியசாலை முதல் தேசிய வைத்தியசாலை வரை, நோயாளர்களுக்கு வைத்திய ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சிகிச்சை சேவைகளை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக ஜூன் மாதம் மாத்திரம் 21,538 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, இம் மாதத்தில் கடந்த 9 நாட்களில் 10,685 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 34,828 (52.72 சதவீதம்) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென் மாகாணத்தில் 10,372 (15.70 சதவீதம்) நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.
டெங்கு பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் சுகாதார சேவைக்கு சவாலாக உருவெடுத்துள்ள டெங்கு பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது.
ஆகையால் தமது வீடு, தொழில்புரியும் நிறுவனம், பாடசாலை, மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழலில் நுளம்புகள் பரவுவதற்கு இடமளிக்காது, கழிவுகளை முறையாக அகற்றித் தூய்மையாக வைத்திருப்பது அனைவரது கடமை என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
