மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான விசேட வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் எழுப்பிய கேள்விக்கு மாணவி தவறான பதில் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையில் மாணவியின் கன்னத்தில் பலமுறை அறைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் மாணவியின் கன்னத்தில் காயங்களும் இரத்தக் காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் உடனடியாக மாணவியை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
