திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று (10) பிற்பகல் 3.40 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இறால் பண்ணை வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பெண் ஒருவர் சிறுகாயமடைந்த நிலையில், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முச்சக்கர வண்டியில் மூன்று பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் சாரதி உட்பட ஐவர் பயணித்திருந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
