நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக 40 குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் மூன்று குழுக்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 136 சிறை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை (STF) உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நிகழ்ந்தபோது சிறைச்சாலையில் 2,417 கைதிகளும் 166 சிறை அதிகாரிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கட்டுவெலகம சுரேஷ் என்ற கைதியை மையமாகக் கொண்ட மோதலே வன்முறைக்கு காரணமானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 3 கைதிகள் உயிரிழந்ததுடன், 36 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 60 துப்பாக்கிகள், ஒரு எப்-58 துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 வெடித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் கண்காணிப்பு கமெரா பதிவுகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளன.
வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
