நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தோட்டப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் நேற்று (15) உரையாற்றிய அவர், டெங்கு நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடுகள், சுற்றுப்புறங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
கொட்டகலை நகரம் மற்றும் வட்டகொடை பகுதிகளில் பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து தோட்டப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு சுகாதார அதிகாரிகள், அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு பெறப்படும் எனவும் தெரிவித்தார்.
டெங்கு என்பது தனிநபர் ஒருவரின் பிரச்சினை அல்ல, அது சமூகத்தின் பிரச்சினை என்பதால் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.

