இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டிகேரியன், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அண்மையில் கடந்த வியாழக்கிழமை (09) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் நெருக்கமான இருதரப்பு உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான இராஜதந்திர உறவுகள் உருவாக்கப்பட்டதன் 70வருட பூர்த்தி அடுத்தவருடம் கொண்டாடப்படவுள்ளமையையும் நினைவுகூர்ந்தார்.
மேலும், சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு ரஷ்யா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்காக இலங்கையின் சார்பில் நன்றியைத் தெரிவித்த சபாநாயகர், பல்வேறு துறைகளில் ரஷ்ய வழங்கியுள்ள பெறுமதியான ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

அத்துடன், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைச் சந்தையில் முக்கிய சந்தையாக ரஷ்யா விளங்கி வருவதாகவும், எரிசக்தித் துறையில் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்பிற்குப் பாராட்டைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.இலங்கை செய்திகள்
இதற்கு பதிலளித்த ரஷ்ய தூதுவர் மாண்புமிகு லெவான் எஸ்.டிகேரியன், இரு நாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இலங்கை தொடர்ச்சியாக வழங்கிவரும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்காக சபாநாயகருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தையும், பல்வேறு துறைகளில் இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கை மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகளின் மக்களின் பரஸ்பர நலன்களை முன்னிறுத்தி, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பாராளுமன்ற உறவுகள் மற்றும் பரிமாற்ற வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீளவும் வலியுறுத்தினர்.
