2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் பதினாறாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து போர்ச்சுகல் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் விளைவாக போர்ச்சுகல் அணி 0-1 எனத் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த உலகக்கோப்பைத் தொடரே தனது கடைசி உலகக்கோப்பை என்று ரொனால்டோ முன்னதாகவே அறிவித்திருந்தார். தனது 41 வயதிலும் ஆறாவது முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்று சாதனை படைத்த அவர், உலகக்கோப்பை மேடையில் மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து அவர் முழுமையாக ஓய்வு பெறுவாரா என்ற கேள்விக்கு, தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதைத் தானே முடிவு செய்வேன் என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இதுவே தனது கடைசி உலகக்கோப்பை என்பதை அவர் உறுதிப்படுத்தியிருந்தார். சர்வதேச கால்பந்து அரங்கில் பல சாதனைகளை நிகழ்த்திய ரொனால்டோவின் இந்த உலகக்கோப்பை பயணம், கண்ணீருடனும் ஏமாற்றத்துடனும் நிறைவடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதிலுமுள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு உருக்கமான விடை கொடுத்து வருகின்றனர்.
ரொனால்டோவின் வரலாற்றுச் சாதனைகள் சில:
1 வயதான ரொனால்டோ, 2006 முதல் 2026 வரை தொடர்ந்து 6 உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆறு வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தத் தொடரில் படைத்தார்.
41 வயது மற்றும் 147 நாட்களில் கோல் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை (146) அடித்த வீரர் என்ற சாதனையுடன் ரொனால்டோ வலம் வருகிறார்.
கனத்த இதயத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு தனது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
