சர்வதேச கிரிக்கெட் பேரவை, சர்வதேச கிரிக்கெட் காலண்டரில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அரை இறுதிப் சுற்றுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உலகளாவிய கிளப் டி20 (T20) தொடரை ஆரம்பிப்பது ஆகியவை அடங்கும்.
எதிர்கால ஒளிபரப்பு உரிம பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டின் வணிக ரீதியான ஈர்ப்பை வலுப்படுத்தும் நோக்கில், எடின்பர்க்கில் நடைபெற்ற ஐசிசி-யின் வருடாந்த மாநாட்டின் போது இந்த முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.
ஆண்கள் 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14-லிருந்து 12-ஆகக் குறைப்பது. இது 2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலிருந்து நடைமுறைக்கு வரலாம். மேலும், தற்போதைய ‘சூப்பர் சிக்ஸ்’ முறைக்கு பதிலாக, புதிய “சூப்பர் 7” முறையைக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அரை இறுதிப் போட்டிகளை அறிமுகப்படுத்துவது. இதன் மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிவரை அதிக அணிகள் போட்டியில் நீடிக்கவும், தொடரின் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள முன்னணி உள்நாட்டு பிரான்சைஸ்அணிகளை உள்ளடக்கிய, உலகளாவிய கிளப் டி20 தொடரை அறிமுகப்படுத்துவது. இது உலகளாவிய கிளப் சாம்பியன்ஷிப் என்ற பழைய கருத்தாக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாகும்.
இந்த முன்மொழிவுகள் இன்னும் விவாத நிலையிலேயே இருப்பதாகவும், ஐசிசி-யினால் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்றும் குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அவை முறைப்படி ஏற்கப்படுவதற்கு முன்னதாக மேலதிக ஆலோசனைகள் தேவைப்படும்.
