அனைத்து அரச பணியாளர்களினதும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நடைமுறையின்படி, பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக காணப்படுகிறது. எனினும், சில விசேட துறைகளில் பணியாற்றுவோருக்கு வேறுபட்ட ஓய்வு வயது நடைமுறையில் உள்ளது.
இதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 61 வயதும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு 63 வயதும், உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு 65 வயதும், விசேட மருத்துவ நிபுணர்களுக்கு 63 வயதும் ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை 67 ஆக உயர்த்துவது தொடர்பிலும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், பல தொழில்முறை அமைப்புகளும் தங்களது துறைகளில் ஓய்வு வயதை உயர்த்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அரச நிறுவன ஊழியர்களின் EPF மற்றும் ETF போன்ற நிதி நன்மைகளை மேலும் சில ஆண்டுகள் தாமதமாக வழங்கும் வாய்ப்பு உள்ளிட்ட காரணிகளும் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை உதவக்கூடும் என அரச தரப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
