இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவர்க்கார பொருட்களுக்கு கட்டாய லேபிள் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
புதிய விதிமுறைகளின்படி, சவர்க்கார பொருளின் பெயர் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது குறைந்தது இரண்டு மொழிகளிலாவது பிரதான பொதியில் தெளிவாக இடம்பெற வேண்டும். மூன்றாவது மொழி பொதியின் வேறு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும், சோப்பில் உள்ள மொத்த கொழுப்பு சத்து சதவீதமும் குறைந்தது 2 மில்லிமீட்டர் அளவிலான தடித்த எழுத்துக்களில் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
இந்த விதிமுறை குழந்தைகள் சவர்க்காரம், குளியல் சவர்க்காரம், சவரச் சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவை சவர்க்காரம், குளியல் பார் மற்றும் மென்மையான சவர்க்காரம் உள்ளிட்ட பல்வேறு வகை சவர்க்கார பொருட்களுக்கு பொருந்தும்.
இந்த புதிய வர்த்தமானி விதிமுறைகள் 2027 ஜூலை 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
