கற்பிட்டி வன்னிமுந்தலில் நடைபெற்ற படகு ஓட்டப் போட்டியின் போது ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கற்பிட்டி முகத்துவாரத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னதாக வன்னிமுந்தலைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் பயணித்துக் கொண்டிருந்த முகத்துவாரத்தைச் சேர்ந்த நபர், மற்றொரு படகுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு இருந்த குழுவினரால் கோடரி, தடிகள் மற்றும் ஹெல்மட் உள்ளிட்ட பொருட்களால் சரமாரியாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர் முதலில் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த கற்பிட்டி பொலிஸார் உடனடியாக தலையிட்டு காயமடைந்தவரை மீட்டதுடன், தாக்குதலில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
