யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று (16) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள், 32 பிஸ்டல் தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 11 தோட்டாக்கள், 6 ரிவோல்வர் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 34,000 வெளிநாட்டு சிகரெட்டுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
