உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவுடன் தொடர்புடைய இடைக்கால மனுக்களை எதிர்வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தமைக்கு எதிராக சுரேஷ் சலே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பெங்கமுவே நாலக தேரர், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட எட்டு தரப்பினர் தங்களது சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதி கோரி இடைக்கால மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னர், இடைக்கால மனுக்கள் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்தார்.
இதனையடுத்து, அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் குறித்த இடைக்கால மனுக்களை ஆகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
