இந்தியாவின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ எனும் தனியார் நிறுவனம், இந்திய மண்ணிலிருந்து முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்த ‘விக்ரம்-1’ எனும் ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
முற்றுமுழுதாக கார்பன் கலப்புக் கட்டமைப்பால் (Carbon-composite structure) உருவாக்கப்பட்ட இந்த ரொக்கெட், தொழில்நுட்ப ரீதியாகப் பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சுமார் 7 அடுக்கு மாடி உயரத்தைக் கொண்ட இந்த ரொக்கெட் பல நிலைகளைக் கொண்ட அதிநவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த முதற்கட்ட பயணத்துக்கு ‘ஆகமன்’ (வருகை) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று இந்த ஏவுதல் திட்டமிடப்பட்டிருந்தது.
ஏவுவதற்கு 4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலக் கணிப்பு (countdown) தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், விஞ்ஞானிகள் துரிதமாகச் செயல்பட்டு அந்தத் தடங்கலைச் சரிசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12.06க்கு ‘விக்ரம்-1’ ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த ரொக்கட், 350 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்திய தனியார் நிறுவனம் ஒன்று, சொந்தமாகத் தயாரித்த ரொக்கெட் மூலம் விண்கலங்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய முதல் முயற்சி இதுவாகும்.
இதன் மூலம், உலகளாவிய விண்வெளி சந்தையில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதுடன், தனியார் விண்வெளித் துறைக்கான கதவுகள் அகலத் திறக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
