நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலைமையைக் கையாள்வதற்காக சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டங்களின் கீழ், 48 பொலிஸ் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்பு குழுக்கள் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக அடிப்படையிலான சிரமதானப் பணிகளை முன்னெடுத்தல் மற்றும் அது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களது சொத்துக்களில் நுளம்பு பெருகும் இடங்கள் இருக்க அனுமதிப்பவர்கள் அல்லது சுகாதாரமான சூழலைப் பேணத் தவறுபவர்களுக்கு எதிராக , சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 262ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம்.
மேலும், 2007ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க நுளம்பு பெருகும் இடங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்படும் அல்லது முறையான தூய்மை பேணப்படாத வளாகங்களுக்கு எதிராக “சிவப்பு எச்சரிக்கை” விடுக்க சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பின்பற்றத் தவறுவது இந்தச் சட்டத்தின் 6ஆவது பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதுடன், அதற்கு அதிகபட்சமாக 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், நுளம்பு பெருகும் வகையிலான சூழலைப் பராமரித்தமைக்காக 4,672 வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, டெங்குவினால் ஏற்படும் மேலதிக உயிரிழப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
