இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே பௌத்த மத மற்றும் கலாசாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கூட்டுச் சுற்றுலாத் திட்டங்களை (Tourism Packages) அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, வியட்நாமின் முன்னணி விமானச் சேவையான ‘வியட்ஜெட்’ (Vietjet), கொழும்பு மற்றும் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரங்களுக்கு இடையிலான தனது முதலாவது நேரடி விமானச் சேவையை நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
அமைச்சின் தகவல்களின்படி, இந்த நேரடி விமானச் சேவையானது வாரத்தின் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் வியட்நாமின் ஏனைய நகரங்களுக்கும், கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இலகுவாகப் பயணிக்க முடியும்.
கொழும்பில் நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஜித ஹேரத், வியட்ஜெட் விமானச் சேவையை வரவேற்றதுடன், கடந்த ஆண்டு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் வெற்றிகரமான பிரதிபலனே இந்த நேரடி விமானச் சேவை என்றும் குறிப்பிட்டார்.
