திருகோணமலை துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்ட தரப்பினரால் இன்று (20) அகற்றப்பட்டது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை, 17.5 அடி அகலம் கொண்ட கட்டடம் ஆகியவை சட்டவிரோதமான முறையில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவற்றை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு அகற்றல் கட்டளையானது 14.07.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த அகற்றல் கட்டளைக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கானது நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு அகற்றல் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் இன்றைய தினம் அகற்றப்பட்டு வருகின்றன.
