இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்து, அவர்களைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக அகில விராஜ் காரியவசம் நேற்று(21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகாத நிலையில், தனது வருகையின்மைக்கான எந்தக் காரணத்தையும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அரச ஊழியர்களைத் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அது தொடர்பான கையூட்டல் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
