ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையிலான தற்போதைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 3 வருடப் பதவிக்காலம் ஜூன் 28 நிறைவடையவுள்ளது. எனவே ஆணைக்குழுவிற்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான உத்தியோகபூர்வ பணிகள் குறித்து இதுவரையில் அறிவிப்புக்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின்படி, ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமேயாகும்.
தற்போதைய தலைவர் எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் உறுப்பினர்களான நிமலசேன கார்டிய புஞ்சிஹேவா, பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா, கலாநிதி கெஹான் தினுக் குணதிலக்க ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அரசியலமைப்பின் 41ஏ உறுப்புரையின்படி, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் அரசியலமைப்பு பேரவைக்காக நியமிக்கப்பட்ட பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகிய புதிய சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர், புதிய ஆணைக்குழு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் பணிகளை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
