செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி பகுதியில் காலை 8 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், போருக்குப் பின்னர் பல ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வில் இதுவரை 467 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச நீதி விசாரணை அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இந்த விடயத்தை மூடிமறைக்கும் வகையிலோ அல்லது நீர்த்துப்போகச் செய்யும் வகையிலோ நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இன்று காலை (22) சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்ட சென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்களில் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணையை உடனடியாக முன்னெடுக்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
