தலவாக்கலை வேல்ட் விஷன் நிறுவனத்தினால் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் சிறந்த ஊட்டச்சத்தை உறுதி செய்வதையும், வன்முறையற்ற ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை நகரில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வு, நிறுவன அதிகாரி ஷிகா சமர்த்துங்கா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி, வீதி நாடகம் மற்றும் ஸ்டிக்கர் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
லிந்துலை பிரதேச அபிவிருத்தி திட்டத்தின் (Lindula Area Development Programme) ஏற்பாட்டில், “போதும் பிரச்சாரம்” (Enough Campaign) என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
தலவாக்கலை நகரிலிருந்து ஆரம்பமான பேரணி, இலங்கை வங்கி சுற்றுவட்டாரத்தை கடந்து தலவாக்கலை பஸ் நிலையத்தை சென்றடைந்தது.
“வன்முறைக்கு ‘போதும்’ என்று முற்றுப்புள்ளி வைப்போம். நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் பேரணி, வீதி நாடகம் மற்றும் கையெழுத்து வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றன.
