இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ரூ.34,31,400 பெறுமதியான 64 புறாக்களுடன் இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகள் வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்ற இருவரை சோதனையிட்டபோது, அவர்களது ஆறு பயணப்பொதிகளுக்குள் சிறிய இரும்புக் கூண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய செல்லப்பிராணி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவராகும். அவர்கள் புறாக்களை இத்தாலியில் கொள்வனவு செய்து துபாய் வழியாக இலங்கைக்கு கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புறாக்களை மீண்டும் இத்தாலிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
