கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில், பயணப் பொதியில் சுமார் 90.8 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த மலேசிய நாட்டுப் பயணி ஒருவர் இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வருகை தரும் முனையத்தில் உள்ள கிரீன் செனல் வழியாக நுழைய முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய இளைஞர் எனவும், 10,000 மலேசிய பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்து, இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரில் கொக்கெய்ன் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, துபாய்க்குப் பயணித்து, அங்கிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது பயணப் பொதியை சோதனையிட்ட போது, சொக்லேட் டொபிகள் இருந்த மூன்று கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோகிராம் 816 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
