கனடாவிலிருந்து சட்டவிரோதமாக ரூ.20 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹஷிஷ் ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற 27 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் வருகை முனையத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டபோது, அவரது இரண்டு பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 பொதிகளில் இருந்து சுமார் 20 கிலோ 117 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் ரூ.20 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கனடாவின் டொரான்டோவில் இருந்து கட்டார், தோஹா வழியாக கட்டார் எயர்வேஸ் விமானத்தில் இலங்கைக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
