கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தம் 258 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கொழும்பு தீயணைப்புப் படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தீ விபத்துகள் தொடர்பில் 17 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் படைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 382 தீ விபத்துச் சம்பவங்களும், 46 மீட்பு நடவடிக்கைகளும் பதிவாகியிருந்தன.
கடந்த ஆண்டு முழுவதுமே 382 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே 258 சம்பவங்கள் பதிவாகியுள்ளது தீவிரமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
தீ விபத்துகள் தவிர, வீதித் தடைகள், மரங்கள் முறிந்து விழுந்தமை மற்றும் வீதி விபத்துகள் தொடர்பான 13 அவசர உதவி அழைப்புகளுக்கும் தீயணைப்புப் படையினர் பதிலளித்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தீயணைப்புப் படைத் திணைக்களத்தின் விசாரணைகளில் இத்தீ விபத்துகள் அதிகரிப்பதற்கு வேலைத் தலங்களில் போதிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை, பல வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் முறையான தீயணைப்புக் கருவிகள் அல்லது பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமை காரணங்களாக காணப்படுகின்றன.
அதேவேளை, தீ விபத்து ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே அதைக் கட்டுப்படுத்தவோ அல்லது தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கவோ தாமதிப்பது, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தரமற்ற அல்லது முறையற்ற முறையில் மின் இணைப்புகளைப் பயன்படுத்துவது, நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையும் தீ பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குகிறது.
வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மின் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளில் பொதுமக்கள் மற்றும் உரிமையாளர்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு தீயணைப்புப் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
