அநுராதபுரத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அநுராதபுரம் – சிராவஸ்திபுர, பஹேஎல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பதற்காகப் பதப்படுத்தப்பட்டிருந்த நான்கு கோடா பீப்பாய்கள், 80 லீற்றருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் சிராவஸ்திபுர, பஹேஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் வலய மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
