தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து வான்வழிச் சரக்கு மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொதி ஒன்றிலிருந்து, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய கஞ்சா வகை போதைப்பொருட்களைப் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி வந்தடைந்த UL405 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இச்சரக்குத் தொகுதி நாட்டுக்கு வந்துள்ளது.
உத்தியோகபூர்வ ஆவணங்களில் இச்சரக்கானது ஒரு பரிசுப் பொதி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வந்தடைந்த சரக்குத் தொகுதியானது ஜூலை 31 சுங்க அதிகாரிகளால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு மிக நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சுங்க அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, பொதியிடல் உறைகள் உட்பட மொத்தம் 10.608 கிலோகிராம் எடையுடைய கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆபத்தான போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்தச் சந்தைப் பெறுமதி சுமார் 10.6 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
