ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
மொஸ்கோ நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள இத்தாலிய உணவகத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருளை ஏந்திய பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்ற போது, பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தியதாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது வெடிபொருள் வெடித்ததில், குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவக வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது உணவகத்தில் தனியார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும், தாக்குதலின் இலக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
