குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என்ற கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இவ்வழக்கு இன்று நீதிபதி புத்திக சி. ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது சந்தேகநபர்களின் பிணை மனுவும் பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், PTA குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
