நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை, மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்த அவர், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட அபாயப் பகுதிகளுக்கே மீண்டும் செல்லுமாறு காவல்துறையும் தோட்ட நிர்வாகமும் இணைந்து அழுத்தம் கொடுப்பதாக மக்கள் தெரிவித்ததாக கூறினார். அவ்வாறு மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1,091 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிவாரணம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தபோது மலையக மக்களின் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதில் காணி உரிமை தொடர்பான கோரிக்கையும் இடம்பெற்றிருந்ததாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
காணி உரிமை குறித்து ஜனாதிபதி இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், அதனை ஏற்றுக்கொண்டாலும் மலையக மக்களுக்கான காணி உரிமை அதைவிட முக்கியமானது என்றார்.
அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சியினரை குறை கூறுவதற்குப் பதிலாக மக்களின் பிரச்சினைகளுக்கு தெளிவான பதில்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போது மலையகப் பகுதிக்காக நிர்மாணிக்கப்படும் வீடுகள் 1,300 வீடுகளுக்கான வீட்டுத்திட்டத்தில் அடங்குகின்றனவா அல்லது 4,500 வீடுகளுக்கான திட்டத்தில் உள்ளடங்குகின்றனவா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வீடமைப்புத் திட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களுக்கு கடந்த அரசாங்கங்கள் மட்டுமல்லாது பெருந்தோட்ட நிறுவனங்களின் அணுகுமுறையும் முக்கிய காரணமாக இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜீவன் தொண்டமான் தனது உரையில் தெரிவித்தார்.
